ஒரு சிறந்த புகைப்படம் எடுக்க சில சமயம் Location scouting செய்யவேண்டியது அவசியம். 2013 ஆம் ஆண்டு புகைப்படம் எடுக்க Washington ஸ்டேட்டில் இருக்கும் Anacortes எனும் குட்டி தீவுக்கு சென்றேன்.

Anacortes தீவில் ஒரு மாலை பொழுதில் கார் எடுத்துக்கொண்டு அடுத்த நாள் மாலை எங்கு எல்லாம் சென்று புகைப்படம் எடுக்கலாம் என்று location scout செய்ய குடும்பத்துடன் காரில் சென்றேன்.

சுற்றி சுற்றி ஒரு மணிநேரம் ரிமோட் locations எல்லாம் சுற்றி விட்டு, அந்தி சாயும் போது வண்டியை மீண்டும் தங்கி இருக்கும் அந்த சிறிய ஊருக்கு திருப்பினேன்.

 

Scouting முடிந்து விட்டதால் வண்டியில் டிக்கியில் கேமரா gears அனைத்தும் மூட்டை கட்டி வைத்துவிட்டேன்

வழி தெரியாமல் வண்டியை ஊருக்கு நடுவில் இருக்கும் ஒரு முட்டுசந்து ரோட்டில் ஓட்டிச்சென்று நிறுத்திவிட்டேன்.

ரோடு அதோடு முடிந்துவிட்டது. வண்டியை திருப்பவேண்டும்.

 

அப்போது அந்த முட்டுசந்தில் முடிவில் ஒரு வழித்தடம் இருந்தது தெரிந்தது. கொஞ்சம் சூரிய ஒளியும் தெரிந்தது.

சரி என்னவென்று பார்த்துவிட்டு வரலாம் என்று மெதுவாக இறங்கி நடந்து சென்று பார்த்தால் கொஞ்சம் தண்ணீர் தெரிந்தது ..

இன்னும் நூறு மீட்டர் நடந்து சென்று பார்த்தால்தான் தெரிந்தது… அது கடல்!!!

 

நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படம்தான் என் கண்ணால் கண்ட காட்சி.

ஒரு பாழ் அடைந்த பியர். முள் செடிகள் முன் நிற்க சூரியன் மேற்கே முழுவதும் மறைந்து அந்த கடைசி வினாடிகளில் கண் சிமிட்டிக்கொண்டு இருந்தான்.

சூரியன் ஒவ்வொரு செகண்டும் கடலுக்கு உள்ளே செல்வது என் கண்களுக்கு தெளிவாக தெரிந்தது.

ஓரே பரபரப்பு… இவ்வளவு அருமையான காட்சியை எடுக்க கையில் கேமரா இல்லாது அப்போது தான் நினைவுக்கு வந்தது.

அதற்குள் என் மனைவியும் மகனும் என்னை தேடி வந்து விட்டார்கள்.

 

காருக்கு சென்று ஓடி கேமரா எடுத்துவருவதா, இல்லை இன்னும் ஒரு நிமிடத்தில் மறையும் இந்த அற்புத காட்சியை கண்களால் பார்த்து ரசிப்பதா என்று ஒரே குழப்பம்.

என் Iphone மொபைல் எடுத்து டக் டக் என்று புகைப்படம் எடுக்க எடுக்க சூரியன் மறைந்து விட்டது. மொத்தம் 2 shots தான் எடுத்தேன்.

 

சூரியன் மறையும் அந்த கடைசி வினாடிகள் எப்போதுமே ஒரு மாயாஜால நேரம்.

இந்த வினாடிகளுக்குதான் புகைப்பட கலைஞன், தவம் கிடந்தது காத்து இருப்பான்.

கைவிரல்கள் அந்த நொடிகளில் தானாக shutter பட்டனை தட்டோ தட்டு என்று தட்டும்.

 

அந்த மகிழ்சியை சொல்லி மாளாது.

 

அந்த சில வினாடிகளில் நிகழும் வண்ண ஜாலம், ஒரு இயற்கையின் வரப் பிரசாதம்.

 

அது சுப மூகூர்த்தம் போன்றது.

ஐய்யர் தாலியை கட்டுங்கோ என்று சத்தம் போடும் போது சுற்றி நிற்பவர்கள் தானாக தாலியை பெண்ணிற்கு கட்டிவிடுவது போல திரும்பிவராத மணித்துளிகள்.

நான் காருக்கு ஓடி சென்று காமெரா எடுத்து வந்து பார்த்தேன். முழுவதும் இருட்டி விட்டது.

வருத்தத்துடன் வந்த என்னிடம், என் மகன் இந்த இடத்திற்கு நாளையும் வந்து பார்க்கலாம் என்று ஆறுதல் சொன்னான்.

 

அடுத்த நாள் அதே இடத்துக்கு கேமராவுடன் வந்தேன். அதே சூரியன் அதே மேகங்களுடன் அங்கு இல்லை.

புகைப்படம் எடுக்காமல் வந்துவிட்டேன்.

 

யோசித்து பார்த்தால் வாழ்க்கையில் சில நொடிகள் என்றும் திரும்பி வரப்போவதில்லை.

ஒவ்வொரு புகைப்பட கலைஞனும், தன் கண்களால் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அற்புத தருணத்தையும் ஒரு சிறந்த புகைப்படம் எடுக்க தொலைத்துவிட்டுத்தான் எடுக்கின்றான்.

இது அதை தொலைக்காமல் எடுத்த படம். வாழ்க்கையில் மறக்கமுடியாத சுப முகூர்த்தம்.

 

 

( Shot Using Iphone 4S)
Location: Anacortis Isand

https://www.google.ca/maps/place/Anacortes,+WA,+USA/@48.485209,-122.6160081,13z/data=!3m1!4b1!4m2!3m1!1s0x548578d19cc8966b:0xb21d969264e39198