நேற்று என் மனைவி என்னிடம் ஒரு உண்மையை சொன்னார். நீங்க போன வாரம் பார்ட்டியில் பாடினது….சகிக்கவில்லை. அதுவும் இளையராஜா பாட்டை உங்க குரலில் பாடி கொலை செஞ்சுட்டீங்க என்றார்.

அது சரி … உங்க குரலுக்கு என்ன ஆச்சு? ஏன் அப்படி படு கேவலமாக பாடுனீங்க ? வாய்ஸ் ஒத்து வரலைனா வேற பாட்டை செலக்ட் செஞ்சு இருக்கலாமே என்றார்.

 

அதுக்கு நான் சொன்னேன். “உண்மைதான். கேவலமாதான் பாடினேன்.  நான் என்ன பிறவி பாடகனா என்ன? மைக் புடிச்சவன் எல்லாம் பாடகனா … என்ன ? ”

உண்மையை சொல்ல போனா …அப்படி பாட காரணம் நான் இல்லை. யாருக்கும் தெரியாத ஒரு உண்மையை இப்ப சொல்லப்போறேன்”

 

பாடுற குரலோ, கையில் உள்ள சுண்டு விரலோ எல்லாமே இறைவன் நமக்கு கொடுத்த வரம்.

எனக்கு மொத்தம் மூணு டைப் குரல் உண்டு. இது யாருக்கும் தெரியாது.

 

1. ஒண்ணு காக்கா குரல்.

2. இன்னொன்னு குயில் குரல்.

3. மூணாவது பேஸ் வாய்ஸ் இளையராஜா குரல்.

 

இந்த மூணு குரலும் கடவுள் எனக்கு கொடுத்தது. என்ன சில Conditions Apply.

என் வாயில் எந்த பாடல் எந்த வாய்சில் வரும் என்பது நான் செலக்ட் செய்யும் பாட்டை பொருத்து அல்ல.

அது பாடுறதுக்கு முன்னாடி நான் சாப்பிடும் சாப்பாட்டை பொருத்தது. இது தான் அந்த Condition.

 

“அப்போ …நீங்க பார்ட்டியில் கேவலமா பாடினது எந்த குரலில் ?” என்று கேட்டார் என் மனைவி.

 

பார்ட்டியில் நான் பாடினது காக்கா குரலில்தான். தயிர் சாதமும், வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டா எனக்கு காக்கா குரல்தான் வரும்.

அப்ப என் தொண்டையில் குயிலும், இளையராஜாவும் படுத்து தூங்கிட்டு இருந்தாங்க” என்றேன்.

 

“அப்போ … குயில் குரல் எப்ப வெளிய வரும்னு?” கேட்டார் என் மனைவி.

 

சிக்கன் பிரியாணியோ அல்லது மட்டன் பிரியாணியோ சாபிட்டாதான் குயில் குரல் வரும்.

40 வருஷமா sunday மத்தியம் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தொண்டைக்கு, திடீர்னு sunday மத்தியம் தயிர் சாதம் போட்டா உடனே எனக்கு என்ன தியாகராஜ பாகவதர் குரலா வரும்???… காக்கா குரல் தான் வரும்.

“வழக்கமா குயில் பாடும் போது தொண்டையில் காக்காவும், இளையராஜாவும் படுத்து தூங்கிட்டு இருப்பாங்க” என்றேன்.

 

 

உடனே மனைவி ” நீங்க இதுவரை இளையராஜா குரலில் பாடியதை நான் கேட்டதே இல்லையே …

எப்ப உங்களுக்கு அந்த இளையராஜா குரல் வரும் ? அடுத்த முறை பார்டியில் கண்டிப்பா நீங்க இளையராஜா குரலில்தான் நீங்க பாடனும்..” என்றார்.

 

அதுக்கு நான் சொன்னேன் …’ இதுவரைக்கும் நானே அந்த இளையராஜா குரலை ட்ரை செஞ்சதில்லை. வேணும்னா உனக்காக Try செய்யிறேன். கொஞ்சம் கஷ்டம்….காரணம் சாபம் அப்பிடி.

காக்கா பிரியாணி சாபிட்டாத்தான் எனக்கு இளையராஜா வாய்ஸ் வரும்னு கடவுள் சாபம் கொடுத்து உள்ளார்.

 

நான் எந்த குரலில் அடுத்த பார்டியில் பாடனும் என்பது நான் செலக்ட் செய்ற பாட்டில் இல்லை,  அது நான் சாப்பிடும் பிரியாணியில் இருக்கு.